Saturday 31 December 2022

// // 1 comment

2022ம் நானும்.

 வணக்கம், ரொம்ப காலம் கழிச்சு திரும்பவும் எழுதணும் எண்டு வந்து இருக்கன், காரணம் பாத்தா எத்தனையோ விஷயம் யாரிட்டையாவது சொல்லணும் எண்டு தோணும் ஆனா அப்பிடி சொல்லும்போது அவங்க கருத்துக்கள் எங்க என் முடிவுகளில செல்வாக்கு செலுத்திடுமோ எண்ட பயம்  எப்பயுமே இருக்கும். அப்பிடி சொல்லாம சொல்லாம சேர்த்த விடயங்கள் இப்போ சேர்ந்து ஒரு பெரிய பூதமா முன்னுக்கு நிக்குது, அது தான் யாருமே வாசிக்காட்டியும் இங்க சொல்லுவம், எண்டு வந்து இருக்கன், பாப்பம் இனி மாசத்துல ஒரு தரமாச்சும் ஏதும் எழுத பாக்கிறன். இப்ப வாங்க 2022 எனக்கு என்ன எல்லாம் சொல்லி தந்த, என்ன எல்லாம் பண்ணினான் எண்டும் அதே மாதிரி 2023ல என்ன செய்ய பிளான் இருக்கு எண்டும் பாப்பம்



 2022 தொடங்கேக்க மிக சிறப்பா தொடங்கினாலும் முடியும் போது என்ன பண்ணுற எப்பிடிச்சும் போகனும் எண்ட முடிவுக்கு தான் கொண்டு வந்து விட்டு இருக்கு. எனக்கு நினைவு தெரிஞ்சதில இருந்து இந்த வருஷம் மாதிரி, மன வருத்தம், கவலை, தனிமை, என்ன பண்ணுற எண்டு கூட தெரியாம இருந்த எல்லாம் ஒண்டு சேர்ந்து வந்தா இந்த வருஷம் தான். 

நான் பார்த்ததுக்குள்ளேயே மிக Perfectஆனா ஆள் யாரென்று பாத்தா என்க அப்பா தான், என்க வீடு அவளவுக்கு வசதியான வீடா எல்லாம் இருக்கேல்ல, ஆனா எங்க எல்லாருக்கும் என்ன எல்லாம் தேவையோ அது எல்லாம் கிடைக்க வழி செய்தவர் அவர் தான், எப்பயுமே நாங்கள் எடுக்கிற முடிவுகள் சரியா இருக்கும் எண்டு எங்களுக்கு உணர்த்தியவர். நீ நல்ல எண்ணத்தோட நினைத்து செய்யிற எல்லாம் எப்பயுமே பிழையானது எண்டு சொன்னவர், He is the one of the disciplined person i ever see. நாங்க எல்லாம் இப்போ இப்பிடி ஒரு நல்ல நிலைமையில இருக்கிறம் எண்டா அதுக்கு எல்லாம் ஒரே காரணம் அவர் தான், ஆனா துரதிஸ்ரவசமா இந்த ஆண்டு எங்களை பிரிந்து இறைவனடி சேர்ந்தார். சில விடயங்கள் எங்களை எப்பிடி பாதிக்குது எண்டு சொல்ல ஏலாது. காட்ட ஏலாது ஆனா அதன் தாக்கம் கூடவா இருக்கும். அப்பிடி தான் இதுவும். நான் செய்யிற காணொளிகளா இருக்கட்டும், இல்லை என்னவா இருக்கட்டும், நானா காட்டாட்டியும், அப்பாவா போய் அது எப்பிடி இருந்த எண்டு சொல்லுவார், இப்போ இனி நான் எது செய்தாலும் அப்பிடி நடக்கா எண்டு நினைக்கும் போது அடுத்த விஷயத்தில கவனம் செலுத்தவே தோணல.  என்கிட்ட நேரடியா சொல்லாட்டியும் அம்மாட்ட சொல்லுவார் பாரு அது செய்தான் நல்லா இருந்த எண்டு எல்லாம். இனி அவை எல்லாம் நடக்கா காரியம் ஆகிட்டு. அவரின் கடைசி நிமிடங்களில நான் நேர பக்கத்தில தான் நிண்டன், எங்களுக்கு மிக நெருக்கமானவர் எம்மை விட்டு பிரியும் அந்த நிமிடங்கள் இலகுவானவை இல்லை, To be Frank it will bring you PTSD, we will think that it is not that much a issue, but as the one in that phase i can definitely say it is not easy to deal with and there will be no one you can share to understand what you experience and ongoing

இந்த பிரிவு, 2022ண்ட பிற்பகுதிய என்ன செய்யிற எண்டே யோசிக்க வச்சுது. அதில இருந்து தப்பிக்கிறத்துக்கு எத்தனையோ விடயங்களை முயற்சித்தன், வழமையா மன குழப்பங்கள் இருந்தா ஒரு சின்ன பயணம் சரி செய்யும், இந்த முறை ஒன்றுக்கு இரண்டு பயணகள், ஆனா எந்த பயனும் கிடைக்கவில்லை, பல புது விடயங்களை முயற்சி செய்து அதுல கூட கவனம் செலுத்தினா சரியா இருக்கும் எண்டு பாத்தா, மனம் அதுல செய்யவும் விடல இதுவும் எதோ ஒரு விதத்தில PTSD தாக்கம் செலுத்தி கொண்டே தான் இருந்த, கடைசியா இதுக்கு ஒரு தற்காலிக தீர்வா கொண்டு வந்த என்னை சுத்தி பலர வச்சு இருக்கும் போது அது மனம் வேறைய பற்றி யோசிக்காம இருக்கு, ஆனா இது தான் இந்த problemஆஹ taggle பண்ற வழியா என்டா இல்லை, எதோ வேலை செய்து எண்டு செய்யிறன். பாப்பம் எவ்வளவு காலத்துக்கு எண்டு. 

இது மட்டும் இல்லாம வாழ்க்கேல ஒரு தரம் மட்டும் வாற எண்டு நான் நினைக்கிற ஒண்டு "காதல்" That Special Person ஒருவராக தான் இருப்பார் எண்டு நம்பிறவன் நான் ( இது தனிப்பட்ட கருத்து) கிட்ட தட்ட 8 வருடங்களாக தொடர்ந்த உறவு எண்டு சொல்லலாம், சிறிய சண்டைகள், எத்தனையோ நினைவுகள், கற்பனைகள் எண்டு கட்டிய மளிகை அது, ஆனால் எனது தவறு, எனது நிலையற்றதன்மை, எனது பிள்ளைகளால் உடைத்து எறிந்தேன் இந்த வருஷம். என் பிளைகளால் இன்னொருவரின் மனதில் நீங்கா வடுக்கள். இதன் பின் யாரிடமும் ஆகலும் நெருக்கமாய் இருக்க கூடாது என்ற முடிவு, நானே வேலியினை போட வேண்டிய கட்டாயம், ஏனெறால் எப்போதும் காயப்படுத்த கூடாது என்று நினைத்த ஒருவரையே இப்படி வடுக்களை கொடுத்தேன் என்றால். நண்பர்கள், கூட பயணிக்கும் தோழர்களுக்கும் இதே போல கவலைகள் குடுத்து விடுவேனோ என்ற பயம். அதனால் பலரிடம் இருந்து ஒரு இடைவெளி. எனக்கு வலித்தாலும் ஒரு நீண்ட பயணத்தில் இது தான் சரியாக இருக்கும் எண்டு நினைக்கிறன். 

நிறைய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பையும் இந்த வருடம் ஏற்படுத்தி தந்திருக்கிறது. அது மட்டும் இல்ல காணொளி செய்வதையோ, வாசிப்போ, தேடலோ எல்லாமே மிகக்குறுகிய அளவில் ஒரு சின்ன வட்டத்துக்குள் தேங்கவிட்டுவிட்டு உட்கார்ந்திருக்கிறேன். இதையெல்லாம் விட்டுட்டு நான் ரொம்ப தூரம் போயிட்டனோ எண்ட feel அவ்வளவு emptiness அ கொடுத்திருக்கு. பல நேரங்களில் "நான் என்ன செய்துகொண்டிருக்கிறன்" எண்ட கேள்வி மிகப்பெரிய சோர்வை தந்திருக்கிறது.

இவை மட்டும் இல்லாமல் சில புது முயற்சிகள் அதுல பல தோல்விகள் + பல வெற்றிகள். சில நல்ல நண்பர்களின் வருகைகள். பலரின் பிரிவுகள்.

லூசன், கோமாளி, நாகரிகம் தெரியாதவன், முரடன் என்ற பட்டங்கள் சேர்ந்தே வந்த வருடம். ஆனாலும் இப்பிடி இருக்கிறவனையும் அண்ணா என்று அழைக்க சில தம்பி, தங்கையர் 🙂

இந்த வருஷம் எப்பிடி எல்லாமோ போச்சு, என் கஷ்டங்களை ரொம்ப கதைச்சிட்டன். பாப்பம் அடுத்த வருஷம் எப்பிடியாவது என்னை நானே திருத்திக்க பாக்கிறேன்.

2023ல ஒரு 4-5 திட்டங்கள் இருக்குது, யாழ்ப்பாணத்தில இல்லாத புது விடயங்கள். பாப்பம் அதும் 3 ஆவது சரி பண்ணனும். இப்போ 100KGஇல் இருக்கன் அதை ஒரு 75-80KGகுள்ள கொண்டு வரணும். சரியான ஒரு Team பில்ட் பண்ணனும் எத்தனையோ வருடங்களாக முயற்சிக்கிறன் 2023ல அது சரி வரும் போல தெரியுது, 2-3 பேர் ஏற்கனவே சரியாக சேர்ந்து இருக்கம் எண்டு நினைக்கிறன் ஒரு 10 பேர் கொண்ட teamஆ வரணும். பாப்பம். Yarl Samayalல வித்தியாசமா கொஞ்ச standerd உயத்தி 100K க்கு கொண்டு போகணும். அதே போல Siva;s View வாரம் 1 full காணொளி போடனும் 4 shots போடணும். மாசம் ஒரு பயணம் போகணும். இவ்வளவும் தான் இப்போ சொல்ல கூடிய விடயங்கள் பாப்போம். எதனை சரி வருது எண்டு.

இப்படி ஒரு வித்தியாசமான ஆண்டினை, வித்தியசமாக்கிய நண்பர்கள். எப்போதும் எனக்கு பக்க பலமாக இருந்த உறவுகள், சுவாரசியம் ஆக்கிய அனைவருக்கும் நன்றிகள். 2023இனை சேர்ந்து சந்திப்போம்.
Read More

Sunday 5 September 2021

// // Leave a Comment

நானும் யாழ் சமையலும்.

எத செய்ய தொடங்கினாலும் ஒரு 6 மாசத்தோட அத விட்டுட்டு இன்னொண்டு பக்கம் போறவன் நான். (சாத்தியமா இது நல்ல பழக்கம் இல்லை :p ) சிவாவின் அலட்டல்களில எழுதினது ஆகட்டும், Siva Feed la எழுதினது ஆகட்டும், Podcastல கதச்சதாகட்டும், Siva's View சனலில காணொளி செய்ததாகட்டும், இல்ல டிக்டாக்ல சின்ன சின்ன tech சம்மந்தமான காணொளி போட்டதாகட்டும் இப்பிடி இந்த லிஸ்ட் பெருசா போகும், இது கம்ப்யூட்டர் சம்மந்தமா மட்டும் இல்ல வெளி ப்ரொஜெக்ட்ஸ்க்கும் சரியா பொருந்தும் ஒரு 6 மாசத்துல தொடங்கினத அப்பிடியே விட்டுட்டு அடுத்தத தொடங்கிற ஆள் நான். இது என்ன சுத்தி இருக்க பலருக்கு தெரிஞ்ச ஒரு விசயம். 

இப்பிடி  இருந்த நான் 2016ல கொழும்புல எங்க நல்ல டேஸ்ட் ஆனா சாப்பாடு கிடைக்கும் எண்டு வித்தியாசம் வித்தியாசமான கடைக்கு போறது, ஆனா போன 90% கடையிலையும் ( சில கடைகள் செம சாப்பாடு இருக்கும்)  தூள் குழம்பு, டேஸ்ட் எண்டாலே என்ன எண்டு தெரியாத சாப்பாடுகள் தான் கிடைக்கும், அப்ப தோணின ஒரு விஷயம் தான் அட யாழ்பாணத்து சாப்பாடுகள் ரொம்ப நல்லா இருக்குமே அத வீடியோ எடுத்து போட்டா என்ன எண்டு  ஆனா அப்ப எனக்கு எடிட்டிங்கும் தெரியாது வீடியோவும் வடிடா எடுக்கவும்  தெரியாது, ( இப்ப மட்டும் தெரியுமா எண்டு கமெண்ட்ல கேக்க பிடாது, அது வேற டிப்பாட்மென்) அப்ப அண்டைக்கே போய் யூடுப் சேனல் தொடங்கியாச்சு. அடுத்தது பெயர் வைக்கணும், என்ன பெயர் வைப்பம் யாழ்ப்பாணத்து உண்வு தானே போட போறம் அப்ப யாழ்ப்பாணம் வேணும், அதுவும் சமைக்கிறத தானே போடா போறம் அப்ப யாழ்ப்பாண சமையல் எண்டு வைப்பம் எண்டு பாத்தா அது ரொம்ப பெருசா இருந்துச்சு,  அத கொஞ்சம் சுருக்கி யாழ் சமையல் எண்டு வச்சாச்சு, பெயர் வச்சாச்சு 

Yarl Samayal லோகோ
அடுத்து லோகோ வேணும் என்ன பண்ணுற எப்பிடி வினோத் வலிமைக்கு பண்ணீனாரோ அதே தான் கூகுள்ள Cooking logo தேடியாச்சு அதுல வந்த ஒரு வடிவான 3,4 ஆஹ டவுன்லோட் பண்ணி நம்ம நண்பன் லோகோ designer  துவாக்கு அனுப்பி இந்த 4யும் வச்சு, சேர்த்து, வெட்டி கொத்தி ஏதாச்சும் பண்ணி ஒரு லோகோவா செய் எண்டு, அடுத்து யாழ்ப்பாணத்த காட்ட ஒரு பனையையும் உள்ள போடு எண்டு, சொல்லி ஒரு வழிய 2 நாளுல
லோகோவும் வந்துச்சு, எல்லாம் போட்டு Dec 5, 2016 யாழ் சமையல் (Yarl Samayal) தொடங்கியாச்சு, கிட்ட தட்ட ஒரு 5 வருஷம் முன்னாடி,  ( ஒரு 11 வருஷம் முதல் தொடங்கின சேனலும் இருக்கு அது பத்தி இன்னொரு சமயம் கதைப்பம்). அடுத்த பூதமா வந்து நிண்டது  எப்பிடி எடிட் பண்ற, அப்ப எடிட்டிங் பழகணும் அத முதல் முதல் எனக்கு பழக்கினது இந்துசன் எண்டு இன்னோரு நண்பன் அப்பேக்க அவன் SLIITல படிச்சுட்டு இருந்தவன், 

கோல் பண்ணி அலுப்பு குடுத்து சரி சொல்லி தாறன் எண்டு சொல்ல வச்சாச்சு. தெஹிவளையில நான் நிண்ட ரூம்க்கு ஒரு 2-3 தரம் வந்து எப்பிடி பண்ணுற எண்டு எல்லாம் வடிவா சொல்லி தந்தான், இப்போ சனல் சரி, எடிட்டிங்கும் ஓரளவுக்கு பழகியாச்சு, இனி காணொளி எடுக்கணும், ஆனா பாருங்க இங்க தான் ட்விஸ்டு, இந்த யாழ் சமையல் ப்ராஜெக்ட் ஆஹ அதோட விட்டுட்டு அடுத்த வேலை பாக்க போயாச்சு, யாழ் சமையல் ப்ராஜெக்ட் அம்புட்டும் தான்.

ஒவ்வொரு வருஷத்திலயும் எப்பயாச்சும் ஒருக்கா தோணும், அப்ப வீட்ட அம்மாட்ட வந்து கதைக்கிற இப்பிடி ஒண்டு செய்யணும் எண்டு எல்லாம் கதைச்சு சரி எடுப்பம் எண்டு எடுக்கிற ஒரு 4 தரம் கூழ் மட்டும் செய்து சாப்பிட்டு இருக்கம் ஒருமுறை நான் திசாங்கன் எண்டு ஒரு நண்பன் எல்லாம் மீன் சந்தைக்கு எல்லாம் போய் மீன் வாங்கிட்டு வாறது எல்லாம் காணொளியா எடுத்து கூழ் செய்து மதீசன் அண்ணாவ எல்லாம் கூப்பிட்டு குடிக்க குடுத்து ரிவியூ வாங்கி இத போட்டு தொடங்குவம் எண்டு சொன்னம், ஆனா எடுத்ததோட சரி, இப்பிடி மாறி மாறி செய்து கடைசில கூழ் குடிக்கிற எண்டா சொல்லுங்கடா நான் செய்து தாறன் ஏன் வீடியோ எடுக்கிற எண்டு சொல்லி ஒவோருக்காவும்  கூழ் காச்சிறீங்க எண்டு அம்மாவே சொல்ல தொடங்கீட்டா அத்தன தரம் கூழ் மட்டும் காச்சி குடிச்சம். கூழ் மட்டும் இல்லை, யாழ்ப்பாண சாப்பாடு தான் சரி வரேல்ல போல நாம கொஞ்சம் வித்தியாசமா தொடங்குவம் எண்டு நான் சியாந் துவா எல்லாம் கார்கில்ஸ் போய் cheese எல்லாம் வாங்கி வந்து Cheese Balls செய்தம், விடியோவும் எடுத்தம் ஆனா அதையும் போடல. பட் நல்லா சாப்பிட்டம்.  கிட்ட தட்ட ஒரு 10 தரம் இப்பிடி செய்யிறது, வீடியோ எடுக்கிறது, செய்தத சாப்பிடுறது இப்பிடியே 3 வருஷம் போச்சு.

2019 லீவுக்கு வீட்ட நிக்கேக்க தொடங்கியே ஆகணும் எண்டு ஒரு முடிவு, எப்பிடி நடந்த எண்டு சாத்தியமா தெரியல, ஆனா வீட்ட இருக்க எல்லாரும் ஒரே முடிவா தொடங்கீட்டம், இவ்வளவு காலமும் விட்ட ஒரு பெரிய பிழை நாங்க காணொளி எடுக்கிறதுக்காக சமைச்சம் ஆனா இந்த முறை வீட்ட அண்டைக்கு மத்தியானம் என்ன கறியோ அத அப்பிடியே எடுத்து போட்டம். பெரிசா எந்த எடிட்டிங்கும் இல்ல, புது பொருட்களும் இல்லை, வழமையா வீட்ட என்ன எண்டு செய்வங்களோ அத அப்பிடியே அம்மா செய்ய நான் எடுத்து போட்டம், முதல் வருசத்தில 32 காணொளி. 

வாரத்துக்கு ஒண்டு போட தான் முயற்சி செய்தம், ஆனா தெரியாதோ, சில வாரங்கள் பிழைச்சுட்டு, ஆனா கனக்க ஆதரவு வந்துச்சு, அம்மா கதைக்கிற தமிழ், செய்முறை விளக்கம் எல்லாம் பலருக்கு பிடிச்சு இருந்த, நாங்கள் இது எல்லாம் பெருசா போகாது எண்டு நினச்சா உணவுகளே 100,000 பார்வை தாண்டி போச்சு,

எதுக்கு பன்மையில சொல்லுறன் எண்டு பாத்தா இது நான் தனியாவோ, இல்ல அம்மாவோ தனியா பண்ண முடியாத ஒண்டு, வீட்ட இருக்க எல்லாரும் சேர்ந்து தான் பண்ணுறது, அது தேவையான பொருட்கள் தயார் பண்ணுறதாகட்டும், இல்ல என்ன அடுத்ததா செய்யிறதா முடிவெடுக்கிறதா இருக்கட்டும், செய்து முடிய பாத்திரங்கள் எடுத்து கிளீன் பண்ணுறதா இருக்கட்டும், ஒரு காணொளி பதிவேற்றினா பிறகு அத பாத்து அடுத்ததுல என்ன மாற்றம் செய்யணும், என்ன தலைப்பு வைக்கிறது, எல்லாமே வீட்ட இருக்க எல்லாம் சேர்ந்து பண்ணுறதால தான் இந்த 2 வருசத்துக்குள்ள இவ்வளவு வந்து இருக்கு எண்டு சொல்லணும்.    

6 மாசத்துக்கு மேல ஒரு ப்ராஜெக்ட்ஆஹ தொடந்து செய்யாத நானே 2 வருசமா செய்யிறன் எண்டா அது கொண்டாடப்பட வேண்டிய ஒண்டு தானே. 😆😝  சரி கொஞ்சம் விஜயகாந் பாணில இந்த 2 வருஷத்திலே யாழ் சமையல் எட்டிய மைல்கல்லுகளை பார்ப்பமா. 


  • 24,859 அன்பு உள்ளங்கள் (Subscribers)
  • 2.1 Million பார்வைகள் ( Views ) 
  • 142.4K பார்வை மணித்தியாலங்கள் (Watch hours) , கிட்ட தட்ட 5,933 நாட்கள் தொடந்து பார்த்ததுக்கு சமன் 
  • 1,619 முகபுத்தக அன்பு உள்ளங்கள்  (FB fans) 
  • 899 இன்ஸ்டா அன்பு உள்ளங்கள் (Insta followers) 


இவ்வளவு மட்டும் இல்லை, எங்கள் பாரம்பரிய உணவு முறைகளின் ஒரு காப்பகமாவும் இருக்குது அது தான் இருப்பதற்குள் ஒரு பெரிய விடயமாக நான் நினைக்கிறன், நீங்க என்ன நினைக்கிறீங்க, நாங்க யாழ் சமையல் சனல்ல என்ன இன்னும் மெருகேற்றனும் எண்டு நினைக்கிறீங்க எல்லாம் சொல்லுங்க, 


உங்களுக்கும் இந்த சமையல் காணொளிகளில் விருப்பம் இருந்தா ஒருக்கா போய் பாருங்கோ என. 

Yarl Samayal - YouTubeஇந்த 


நன்றி.   கெதியில மீண்டும் ஒரு அலட்டல்ல சந்திக்கிறன்.  


Read More

Saturday 30 June 2018

// // 1 comment

ஒரு கண்ணீர் துளியும் நானும்

அடிக்கடி இதுல அலட்டனும் எண்டு நினைக்கிறனான் ஆனா எங்க முடியுது .. நேரம் .. அது தாங்க முக்கிய பிரச்சனையா இருக்குது .. ஆனா இனி அப்ப அப்ப வந்து எதோ அலட்டிட்டு போறன் ..

வாழ்க்கையில் என்னை ரொம்ப பாதிச்ச சம்பவங்கள் எண்டு எடுத்தா அதில் ஒரு விடயம் நான் வாழ்ந்து கொண்டு இருந்த வாழ்க்கையை முழுவதுமாய் திருப்பிய விடயம் .. ஒரு சில கண்ணீர் துளி .. ஒரு பெண்ணின் கண்களில் இருந்து .. அதை அந்த பெண் மற்றவர்களிடம் இருந்து மறைக்க போராடிய கணம்.. ஆம் எல்லாவற்றையும் எளிதில் மறந்து விடும் குணமுடைய எனக்கு இந்த ஒரு சில கணப்பொழுது மட்டும் எப்படியோ என் மனதில் நிலைகொண்டு விட்டது.

ஒரு மகனாக.. தம்பியாக..  என் வீட்டில் பல பெண்கள் என்ற போதிலும் எந்த பெண் கண்ணிலும் நான் அந்த நொடி வரை கண்ணீரை பார்த்ததில்லை.. அதுவே என் மாற்றத்துக்கு காரணம்.. அதுவரை வாழ்க்கையில் என்ன செய்கின்றோம் என்றே தெரியாது .. சில பல கூடாத பழக்கங்களையும் சேர்த்தது கொண்டு திரிந்த என்னை அந்த கண்ணீர் துளிகள் சில கேள்விகள் கேட்க வைத்தது.. என்னையும் பெண்கள் கண்ணில் கண்ணீரை வர வைக்கும் ஒரு சாதாரண ஆண் வர்க்கத்தில் சேர்க்கவைத்தது அந்த கண்ணீர் துளிகள். 

மகனாய் .. தம்பியாய் மட்டுமே இருந்த என்னை ஒரு நல்ல மனிதனாக.. வாழ்க்கையில் நீயும் எதாவது செய் .. நீ நன்றாக படிப்பாய் என நம்பும் உன் அம்மாவின் நம்பிக்கையை பொய் ஆக்காதே என சொல்லிய கணங்கள் அவை .. எனக்கு ஒரு நல்ல நண்பியை உருவாக்கிய துளிகள் அவை... பல தங்கைகளை உருவாக்கிய நொடிகள் .. ஆம் நான் இன்று இவ்வாறு இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம்.. அந்த கண்ணீர் துளிகள் .. 

அன்றில் இருந்து அந்த கண்களில் ஆனந்தத்தை மட்டுமே பார்க்க வேண்டும் எண்டு நினைத்திருந்தேன் .. எப்போதெல்லாம் அக் கண்ணுக்குரியவரை சந்திப்பேனோ அப்போதெல்லாம் அக் கண்கள் அவள் உதடுகள் சொல்லும் பொய்யினை மறுத்து உண்மைகளை சொல்லும் .. என்ற போதிலும் நான் அவள் உதடுகள் சொல்லும் பொய்யை நம்புவதாக அவளையும் என்னையும் ஏமாத்துவேன். அவளும் நான் நம்பியதாய் பொய்ப்புன்னகை செய்வாள்.. 

கடந்த வருடங்களில் என்னால் எந்த கண்ணும் ஒரு துளி நீர் கூட விடவில்லை என்பதில் கவனமாய் இருந்தேன் என்ற போதிலும் கண்ணீர் சிந்தும் பல கண்களையும் அவற்றை மறைக்க முயற்சித்துரும் பெண்களையும் கண்டேன் அவை என் மனதை பாதித்த போதிலும்.. 2014 என்னைப் பாதித்த அளவுக்கு எவையும் பாதிக்கவில்லை .. 

ஆனால்  இன்று.. மீண்டும் அந்த கண்கள் .. அதே கண்ணீர் துளிகள் .. அதை என்னிடம் இருந்து மறைக்க போராடிய கணம்.. வாழ்க்கையில் எதை நான் பார்க்க கூடாது என்று நினைத்தேனோ அதே கணப்பொழுதுகள் மீண்டும் .. உள்ளத்தால் உடைந்த கணங்கள் அவை.. ஆனாலும் எந்த ஒரு ஆறுதலான வார்த்தைகளும் அவளுக்கு சொல்ல தகுதியற்றவனாக நான் அவள் அருகே. 

அவளுக்கு சொல்லும் தகுதி இல்லை என்ற போதிலும். மகனாக, தம்பியாக , அண்ணனாக .. தோழனாக .. காதலனாக .. இருக்கும் நான் சொல்ல விரும்பும் ஒரு விடயம் நாம் யாரையாவது உண்மையாக அன்பு செலுத்துவோமாக இருப்பின். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வருவதற்கு நாம் எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது.. முக்கியமாக அதற்கு  நாம் காரணமாக அமைய கூடாது.. எமது கருத்துக்களை அமைதியாக அவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியும்.. அதே நேரத்தில் அவர்களின் கருத்துக்களை கேட்கவும் எமது செவிகளை சாயுங்கள்..

Read More

Friday 19 August 2016

// // 1 comment

காதலும் இலட்ச்சியமும்.

இப்ப எல்லாம்  எங்க ஐங்கால பக்கம் வாரது.  வரணும் எண்டு ரொம்ப ஆசை தான் பட் நேரம் ஒரு பிரச்சனையா இருக்குது. அதனால அப்ப அப்ப வாராது தான் சரியா இருக்கு.

அட என்ன தலைப்பு வித்தியாசமா இருக்கு எண்டு பாக்கிறிங்களா. இது என் சொந்த கதை இல்லை ஆனால் என் சொந்தங்களின் கதை. அதுதாங்க என் நண்பர்களின்  கதை. 

எனக்கு ஒரு நல்ல நண்பர் இருக்கிறான் (றார் ) அவருக்கு என்ன விட 5 வயது கூட ஆனால் பலவிடயங்களில எங்களுக்குள்ள ஒரு ஒற்றுமை. பாருங்க இண்டைக்கு பல நாளுக்கு அப்புறம் பல மணி நேரம் அவனோட சுத்தினான். பல விஷயங்களை பத்தி கதைச்சம். அப்பிடியே  பத்தியும் கதை போச்சு. 


அப்ப நான் அவன்கிட்ட கேட்டன் ஏன் மச்சி நீ இன்னும் லவ் பண்ணல எண்டு கேட்டன் அப்ப அவன் சொன்னான் இல்ல மச்சி காதல் பண்ணினா  இலட்சியத்துல கவனம் செலுத்த ஏலாது அது தாண்டா  எண்டு சொன்னான். 

அப்ப  நான் அத பெருசா எடுக்கல சோ விட்டுடன். அப்பறம் வீட்ட வந்து இது பத்தி யோசிச்சு பாத்தா அதுல பல கேள்விகள் வருது.அது தான் உங்க கிட்ட கேக்குறன் நீங்க ஒரு பதில் சொல்லுங்க. 

அவன் தான் சொன்னது சரி எண்டுறதுக்கு சொன்ன காரணங்கள். தன்னோட நண்பர்கள் பலர் இந்த காதல் எண்டு போய் ஒரு வேலையையும் செய்யாம எப்ப பாத்தாலும் ஒரு மூலேல போய் போன் கதைச்சுகிட்டு இருப்பாங்க. எங்களுக்கான ஒரு சுகந்திரம் போயுடும். எப்பவும் நாம என்ன பண்ணினாலும் அவங்க கிட்ட சொல்லணும். அதுல காதலுல ஒரு பிரச்சனை எண்டா அத பத்தி பீல் பண்ணியே படிப்பில கவனம் செலுத்த ஏலாது. ( அவன் பல்கலைக்கழக  மாணவன் ) 

இவன் இப்படி சொன்னதுல எந்த பிழையும் இல்ல. ஏனெண்டா இவ்வளவும் நடக்குது தான். அவன் இவளத்தையும் பாத்து இருக்கான். சோ நான் என் நண்பனுல பிழை சொல்ல மாட்டன். 

அவன் ஒரு உதாரணமும் சொன்னான். அவனும் அவன் நண்பனும் பைக் ல வந்து கொண்டு இருந்தவங்களாம் அப்பேக்க அந்த நண்பன்டா காதலி நடந்து போய் கிட்டு இருந்தனவாம். சோ அவன் என்ன செய்தவன் ஏன்டா இவான கொண்டு போய் வீட்டை விட்டுட்டு காதலியை ஏத்த போனவனாம். அதுக்கு ரெண்டு பேருக்கும் இடையில ஒரு வாரம் சண்டை நடந்ததாம்.  இப்பிடி ஏண்டா இருக்கணும் எண்டு என்கிட்ட கேக்குறான்.

நான் சொல்லலாம் சின்ன சின்ன  சண்டைகள் இருந்தா தான் காதலுல சுகம் எண்டு , ஆனால்  அது பொய் எண்டு எனக்கே தெரியும். 

அவனுண்ட point of viewவில காதல் அவனுண்ட இலட்ச்சியத்துக்கு இடைஞ்சலா இருக்கும் எண்டு நினைக்கிறான். 

ஆனால் உண்மை அது இல்லை. 

என் சொந்த அனுபவத்தில் இருந்து 

காதலில் புரிந்துணர்வு மிக முக்கியம். அவ்வாறு புரிந்துணர்வு உள்ள காதல் உங்கள் இலட்ச்சியங்களை அடைய ஒரு ஊண்டு கோலாக இருக்கும்.

உங்களுக்கும் உங்கள் காதலிக்கும் சரியான புரிந்துணர்வு இருந்தா  மத்தவங்க மாதிரி நீங்க ஒரு மூலேல இருந்து மணிக்கணக்கா கதைக்கும் எண்டு இல்லை. ஒவ்வொரு நாளும் சந்திக்கணும் எண்டு இல்லை. ஒரு பத்து நிமிஷம் கதைச்சாலும் மனசு விட்டு கதைக்கும். காதல் வசனங்கள் மட்டும் தான் கதைக்கும் எண்டு இல்லை. உங்க அடுத்த கட்ட திட்டங்கள் பத்தி கதைக்கலாம். அவர்கள் எப்போதும் உங்கள் முன்னேற்றத்துக்கு தான் வழி  காட்டுவார்கள். (சொந்த அனுபவம்) . 

என்னை பொறுத்தவரை காதல் இலட்ச்சியத்துக்கு எப்போதும் தடையாக இருக்காது. உங்கள் கருத்து என்ன ?

 
Read More

Wednesday 6 July 2016

// // 1 comment

அப்பா : ஒரு விமர்சனம்

அப்பா தமிழ் சினிமா வெளியில் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாகி இருக்கிறது. சமுத்திரக்கனி என்கிற தனிமனிதன்… அவனது படைப்பின் வழியாக மிகப்பெரியதொரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறான். மிகவும் அதிமுக்கியமான அவசியமான ஒரு மாற்றத்தை உங்களிடத்தில் எதிர்பார்த்து நிற்கிறான்.

தினசரி… காலையில் எழுந்து குழந்தைகளை பள்ளிக்கு படு சிரத்தையாக அனுப்புகிற அம்மா, அப்பாவா நீங்கள்? ஆம் என்றால்… இது நீங்கள் பார்க்க வேண்டிய படம்.

உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு அடுத்தபடியாக பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப தயாராகிக்கொண்டிருக்கும் அப்பா, அம்மாக்கள் இருக்கிறார்களா….? ஆம் என்றால்… இது அவர்களுக்கான படம்…


கல்வி என்ற பெயரில் இன்றைய தேதியில் நாம் அத்தனை பேரும் அடிக்கிற கேலிக்கூத்தை திரையில் பார்த்து… நீங்கள் சிரிப்பீர்களா? சிந்திப்பீர்களா? அல்லது சிரித்து சிந்தித்துவிட்டு… மறுநாள் காலையில் அதே பழைய குருடியாய் கதவு திறப்பீர்களா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சரியாக உச்சாவும் க**வும் போகக்கூட பழகி இருக்காத ஒண்ணரை அடி குழந்தைகள் கிட்ட புராஜெக்ட் புராஜெக்ட்னு ஒண்ணு செய்யச்சொல்லி கேட்பாங்க பாருங்க… விடிய விடிய நாமே உட்கார்ந்து வெட்டி ஒட்டி… படாத பாடு பட்டு ஸ்கூல்ல கொண்டு போய் சேர்ப்போம். ( இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல .. இது கவனிப்பு + தன் நிலை விமர்சனம் அதுதான் நாம் எண்டு உபயோகிக்கின்றேன். )

 அப்டி நமக்கு செய்ய முடியலன்னா… பக்கத்து வீடு.. எதிர்த்த வீடு..ன்னு எங்கயாவது ஒரு பொண்ணுகிட்ட பையன்கிட்ட கெஞ்சி செய்ய வச்சி வாங்கிருவோம். அதுவும் இல்லையா?... ஸ்டேஷனரி ஸ்டோர்ல ரெடிமேட் ஆக வச்சிருப்பாங்க… காசு கொடுத்து வாங்கி கொண்டு போய் கொடுத்து… மிஸ் கிட்ட குட் வாங்கி பெருமைப்பட்டுக்குவோம். வெக்கமா இல்லையா உங்களுக்கு? என்று கேட்காமல் கேட்கிறார், சமுத்திரக்கனி என்கிற தயாளன் ஆகிய இந்த அப்பா.

நாலு வயசு பிள்ளையும் அஞ்சு வயசு பிள்ளையும் எப்டிங்க புராஜெக்ட் செய்யும்…. அதுவும் பக்கா பெர்ஃபெக்டா வேணும்.. பார்த்தா வீட்டுக்கு எடுத்துட்டு போயி வச்சிக்கணும்ணு தோணணும். படிக்கிறது புள்ளைங்களா? அப்பா அம்மாவா? எதிர்த்த வீட்டு பொண்ணா? பக்கத்து வீட்டு பையனா? ஸ்டேஷனரி கடைக்காரரா? இப்டி உங்களுக்கு கேட்கவே தோணலையா? இப்டி எல்லாம் உங்களுக்கு யோசிக்கவே தோணலையா? என பொருமுகிறார், இந்த அப்பா.

இப்படித்தான் அப்பாக்கள் இருக்கவேண்டும் என ஏங்க வைக்கிற அப்பாவாக… சமுத்திரக்கனியாகிய தன்னையும்… இப்படியே எல்லா அப்பாக்களும் இருந்தால் நாங்க என்ன செய்ய முடியும் என்று குழந்தைகள் கதறுகிற ஒரு அப்பாவாக… தம்பி ராமய்யாவையும்… அச்சு அசலாக திரையில் வடித்தெடுத்திருக்கிறார், சமுத்திரக்கனி. இவர்கள் இரண்டு பேர் மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக இன்னொரு அப்பா, நமோ நாராயணன்…. “இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டுப் போயிரணும்டா” என்று புத்தி?! புகட்டும் அப்பா…

இதில் எந்த அப்பா நீங்கள் என்று தெரிந்து கொள்ள “அப்பா” பாருங்கள்… இதில் எந்த அப்பா உங்கள் அப்பா என்று தெரிந்து கொள்ள “அப்பா” பாருங்கள்…

90% க்கு மேல மார்க் எடுத்தா தான் ஸ்கூல்ல சீட்டே தருவாங்களாம்? அப்போ உங்க ஸ்கூல் எதுக்கு? ஒட்டு மொத்த கடல் பரப்பை விடவும்.. தனியார் கல்வி நிலையங்கள் என்ற பெயரில் ஆக்ரமிக்கப்பட்டுள்ள ஆளுமை செய்கிற நிலப்பரப்பு அதிகமாக இருக்கும் போல. எவ்வளவு பெரிய கட்டடங்கள்… நுழை வாயில்கள்.. ஒவ்வொரு நாளும் நம் தாய்மார்களின் பேராதரவோடு முளைத்துக்கொண்டே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஒன்றுமே தெரியாமல் பிரைவேட் பள்ளியில் தன் குழந்தையை சேர்க்கவேண்டும்… என்று கையைக்கிழித்து கணவனை பிளாக் மெயில் செய்து அடம்பிடிக்கும் ஒரு மனைவியாகிய அம்மா. சமுத்திரக்கனியின் மனைவி, ப்ரீத்தி என்கிற மலர் ஒன்றையுமே சொல்ல முடியாமல் கணவன் சொல்வதை மட்டும் கேட்டு வாழ்கிற இன்னொரு சராசரி மனைவியாகிய அம்மா. தம்பி ராமய்யாவின் மனைவி, வினோதினி என்கிற ராணி.

இந்த இரண்டில் எது நீங்கள் என்று தெரிந்து கொள்ள “அப்பா” பாருங்கள். இந்த இரண்டில் எது உங்கள் அம்மா, உங்கள் மனைவி, உங்கள், சகோதரி…. என்று தெரிந்து கொள்ள “அப்பா” பாருங்கள்.

தனியார் பள்ளிகள்… அதிசயமானவை அற்புதமானவை என்று சொல்ல வைக்க அவர்களே… பெற்றோர்களிடம் கறந்த பணத்தை வைத்து கோடிகளில் விளம்பரம் செய்வார்கள். உதாரணத்திற்கு இப்போது டிவிக்களில் கடுப்பேற்றுகிற அந்த சமையல்கலை பயிற்சிப்பள்ளி. (நாம்ம அமிர்தா  தாங்க :p ) அவ்ளோ விளம்பரம்…. ஒவ்வொரு தனியார் “கல்வித்தொழில்” கம்பெனியும் தங்கள் கம்பெனிகளை ஆகச்சிறந்ததாக ஊர் உலகத்துக்கு காட்ட எந்த லெவலுக்கும் போவார்கள் போல. ஒவ்வொரு கம்பெனியிலும் குறைந்த பட்சம் நாலைஞ்சு நான் கடவுள் ராஜேந்திரன்களை அதற்கென்றே வைத்திருப்பார்கள் போல. அந்த சூட்சுமம் புரியாமல் நீங்கள்… உங்கள் குழந்தைகளை சிறைக்கு அனுப்பிவிட்டு பெருமை பீற்றிக்கொள்கிறீர்கள் என்று தடவிக்கொடுத்து புரியவைக்கிறார், தயாளன் என்கிற இந்த அப்பா.

சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்திற்கு மிகவும் ஆதரவாக அதற்கு முந்தைய தலைமுறை கதாபாத்திரத்தில் பக்குவப்பட்ட மனிதராக, மனைவியின் அப்பாவாக, மாமனாராக, தாத்தாவாக… வேல.இராமமூர்த்தி… சிறப்பு அய்யா. சிறுவன் என்பதில் இருந்து வாலிபன் என்பதற்குள் நுழையும்… ஒவ்வொரு இந்திய ஆண் குழந்தையும் தன் வயதுக்கு நிகரான பெண் குழந்தையை பார்க்கும்போது… ஏற்படுகிற பருவமாற்றத்தை… பதற்றத்தை… “ஒண்ணுக்கு வருதுப்பா” என்று புரியவைக்கும் காட்சி…

அதைத் தொடரும் காட்சிகள்… அய்யோ… இந்த உளவியல் பிரச்சினை தானே, சுவாதியை சிதைத்தது, அய்யோ… இந்த உளவியல் பிரச்சினை தானே வினுப்பிரியாவை தற்கொலைக்கு தூண்டியது என்று புரிந்துகொண்டு… உங்கள் பிள்ளைகளுக்கும் புரிய வையுங்கள் என்று கெஞ்சுகிறது.

முந்தானை முடிச்சு போல பாக்யராஜ் படங்களை நினைவூட்டும் அர்த்தமுள்ள வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள்… அச்சமில்லை அச்சமில்லை… போல பாலச்சந்தர் படங்களை நினைவூட்டும் ஆழமான வசனங்கள்… என சிரிப்பலைகளில் அதிர்கிறது திரையரங்கம். சமுத்திரக்கனியின் மகனாக விக்னேஷ், தம்பி ராமய்யாவின் மகனாக ராகவ்… நமோ நாராயணனின் மகனாக நஷாத், மற்றும் சிறுமிகள் யுவலஷ்மி., கேப்ரியெல்லா… என அனைவரும் உங்களை ஆச்சர்யப்படுத்துவார்கள். குலுங்கி குலுங்கி சிரிக்க வைப்பார்கள், குலுங்கி குலுங்கி அழ வைப்பார்கள். படத்தின் இறுதிக்காட்சியில் தன் ஒட்டு மொத்த அன்பையும் தன் நண்பனின் அப்பா, தம்பி ராமய்யாவின் கைகளில் நிரப்பும்.. அந்த அம்பேத்கர் நகர்… சிறுமியின் கதாபாத்திரத்தின் மூலமாக சமுத்திரக்கனி செய்வதெல்லாம் மிகப்பெரிய சமத்துவ போதனை.
இளையராஜா… திரையில் நகரும் ஒவ்வொரு உயிரின் உணர்வோடும்.. திரையில் அசையும் ஒவ்வொரு முகத்தின் உணர்வோடும்… தன் இசையால் நம்மை இணைக்கிறார்.

இந்தப்படம் பார்த்து… எத்தனை அப்பாக்கள், எத்தனை அம்மாக்கள் மனம் மாறுவார்கள் என்பதில் எனக்கு அப்படி ஒன்றும் பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் ஒரே ஒரு அப்பா மனம் மாறினால்… தயாளன் போல ஒரே ஒரு அப்பா உருவானால்… அதுவே பெரும் புரட்சி. மகிழ்ச்சி.
இது நான் தாங்க என் அப்பாவோட :) -  
என்னை மிகவும் பாதித்த படங்களில் ஒரு இடம் எப்போதும் அப்பாவிற்கு  இருக்கும்.

பின்குறிப்பு - அட என்னையே ஒரு படத்துக்கு பீல் பண்ணி விமர்சனம் எழுத வச்சுடான்களே 
Read More

Tuesday 14 June 2016

// // Leave a Comment

அநியாயங்களிடையே பிறக்கிறான் 'சே'!

இன்று - ஜூன் 14: சே குவேரா பிறந்தநாள்.

சே என்னை மிகவும் பாதித்த ஒரு நபர். அவர் வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லையே என்று யோசிக்க வைத்த நபர். அவரின் பிறந்த நாளில் அவர் பற்றி சில விடயங்கள்

"கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!" தன் கால்தடம் பதியும் நிலபரப்பு எல்லாம் என் தேசமே என்று முழங்கிய 'சே'வின் இறப்பில் பிறந்த செவ்வரிகள் இவை.

'சிரிக்கும் கண்கள், புகைக்கும் உதடுகள், சீவி முடியாத தலைமயிர்,பயணித்து கொண்டேயிருக்கும் கால்கள், ஓயாத போராட்டங்கள்' இதுவே எர்னெஸ்டோ 'சே'குவேராவின் முத்திரைகள்.

உலக வரலாற்றில் 'சே'வின் போராட்ட பேச்சுகள் அழுத்தமானவை, அவையாவும் ஏகாதிபத்தியத்தை துரத்தி அடிக்கக்கூடியவை. இப்படியிருந்தது அவரின் பேச்சுகள் "ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும். அமெரிக்கா ஒரு கழுதைப்புலி, இதனின் கொடிய ஏகாதிபத்தியத்தை வேரறுப்பேன்" என சவாலிட்டார். 'அமெரிக்காவால் பாதிக்கப்படும் சிறிய நாடுகளுக்கு உதவுவது ரஷ்யாவின் கடமை'என ரஷ்யாவுக்கும் அறிவுரைத்தார்.

'சே'வின் கால்தடங்கள் லத்தீன் அமெரிக்க பகுதிகள்,ஆப்பிரிக்க நாடுகள்,ஆசிய நாடுகள் என அநியாயங்களின் பிறப்பிடத்தில் எல்லாம் பதிந்தது. கியூபா விடுதலையை கண்டதே 'சே'வின் புரட்சியால் தான்.

"சாவை எண்ணி ஒருபோதும் நான் கவலை கொள்வதில்லை, என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை தூக்கிக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்!" என்ற 'சே' மரணத்தை கண்டு அஞ்சிடாத மனிதராகவே வாழ்ந்து வந்தார்.

இப்படியான 'சே' ஒரு மருத்துவர். ஆஸ்துமாவின் பாதிப்போடே அடர்ந்த காடுகளில் போராடியவர்.

'மனிதனுக்கு மனிதன் எவனும் இங்கு அடிமையில்லை' என்பதே 'சே'வின் கோட்பாடு. இவ்வுலகத்தை குலுக்கிய பெருந்தலைவர்களின் ஆயுட்காலம் மிகக்குறைவே, அவர்களது மரணமும் மர்மமானதே.

ஆனால் அவர்களது சித்தாந்தத்திலேயே அநியாயங்களின் உலகம் தோற்கடிக்கப்படுகின்றது. இவ்வுலகத்தை குலுக்கும் எந்தவொரு தேசப் போராட்டமும் வர்கப்போராட்டமும் இவர்களை மறப்பதில்லை. மாவீரம் என்பது வீரத்தால் முடிசூடப்படுவதல்ல, எண்ணத்தால் - செயல்பாட்டால் - மனிதத்தால் முடிசூடப்படுவது.

இவ்வுலகத்தில் சீறி சினந்த தோட்டாக்கள் யாவுமே தன் சொந்த நாட்டு மக்களுக்காக பாய்ந்தது. 'சே'வின் தோட்டாக்கள் மட்டுமே இனங்கள் மறந்து மொழிகள் அற்று நாடுகளின் எல்லைகள் அறியாமல் அநியாயங்களிடையே சிக்கித்தவித்த மனிதனுக்காக பாய்ந்தது. மாவீரர்களை மரணம் புதைப்பதில்லை,விதைக்கிறது!

இன்றும் கியூபா பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் தினந்தோறும் சொல்வது என்ன தெரியுமா ? 'எங்கள் முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தார்கள், நாங்கள் 'சே'வை போல் இருப்போம்' என்பதுவே!


ஒரு சாதாரண இளைஞனாக, அனைத்து பலவீனங்களோடும் தன் வாழ்க்கையைத் தொடங்கி, மிக உயர்ந்த லட்சியத்தின் அடையாளமாய், புரட்சி வானின் ஒளிர்மிகு நட்சத்திரங்களில் ஒருவராய் ஆனவர் சே.
சே வாழ்க்கையை நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்தால் - அத்தனை குறைகளை அடுக்கி வைக்கலாம். சேவின் எதிரிகள் எழுதுவதையெல்லாம் பாருங்கள் - அவரைத் தூற்றிக் கொண்டேயிருப்பார்கள்.

அமெரிக்க சிஐஏ என்ற பலம்பொருந்திய வல்லூருக்கு, தன்னையே ஏன் அவன் இறையாக்கிக்கொள்ள வேண்டும்? வாழத் தெரியாதவன் என்பார்கள்.
அர்ஜன்டைனாவில் பிறந்து, மருத்துவமும் படித்த அவர், தனக்கு கிஞ்சிற்றும் தொடர்பில்லாத கியூப புரட்சிக்கு ஏன் செல்ல வேண்டும். ஒரு சுதந்திர நாட்டின் அமைச்சராக செயல்படும் அதிகாரம் கிடைத்தபோதும், மற்ற அடிமை தேசங்களை விடுவிக்கிறேன் என ஏன் புறப்பட வேண்டும். மூளையற்றவன், புகவழ் விரும்பி என்பார்கள்.

தனக்கே தனக்காக, தன்னையே நினைத்துருகி, தானே வாழ்ந்து, தானென்றே செத்துப் போகும் யாருக்கும் இதுவெல்லாம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றுதான்.

என்னைப் பொருத்தமட்டில், மரணம் அல்ல வாழ்க்கைதான் நேசிப்பிற்கு உரியது. ஆனாலும், சாகும்போது இவனைப் போல் சாக வேண்டும் என்ற ஆதர்ஷத்தை ஏற்படுத்தியவர் சே குவேரா.


நாமும் 'சே'வைப் போல் இருப்போம் மனிதனாக...நல்ல தோழனாக!

எனக்கு சே வின் மொழிகள் அனைத்தும் பிடிக்கும் . அதில் எனக்கு தாக்கத்தை ஏற்படுத்திய சில ..

* ‘நான்’ என்பது - எனது முக்கியானவைகளில் ஒன்று!

*“என்னுடைய துப்பாக்கியை வேரொறுவர்எடுத்து அநீதிக்கு எதிராக போராடுவார்கள் என்றால் நான்கொல்லப்படுவதை பற்றி கவனம்
செலுத்தமாட்டேன்”

*நீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன்.

*”கோழையே சுடு! நீ சுடுவது சே குவராவை அல்ல: ஒரு சாதாரண மனிதனைத்தான்!”
_சே குவராவின் கடைசி வசனம்.

”புரட்சியாளர்கள்புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”

Read More

Tuesday 3 May 2016

// // 2 comments

”தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவில் மலம் அள்ளும் மனிதர்கள்”- புத்தக விமர்சனம்


புதுடெல்லியில் பிறந்து லக்னோவில் வளர்ந்தவரான பத்திரிகையாளர் பாஷாசிங் எழுதிய ”தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்” என்ற புத்தகத்தை வாசித்து முடித்தபோது இன்னும் நாகரீகமடையாத சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. காஷ்மீர், புதுடெல்லி, பீகார், மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து மலம் அள்ளும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் வாழ்வியலை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமை விலங்கை தவிர, அடைவதற்கு ஒரு பொன்னுலகம் உண்டு என்பார்கள். தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் தொழிலை ஒழிப்பதற்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இதை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கென்று பெரிய அளவிலான பொருளாதார வசதி எதுவுமில்லை. ஆனால் மனிதனாய் வாழ வேண்டும் என்பது மட்டும் இவர்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கையால் மலம் அள்ளும் கொடூரமான நடைமுறை வழக்கம் இருந்து வருகிறது. பெரும்பாலும் அவர்களின் கூலியாக சிறு ரொட்டி துண்டு தான் கிடைக்கும். அதுவும் பின்வாசல் வழியாகவே பெற வேண்டும். ஆனால், மனிதனை மனிதாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்த கொடுமையை ஒழித்து கட்டுவதற்கு பதிலாக அப்படியொரு நடைமுறையே இல்லை என மூடி மறைப்பதிலேயே அரசுகள் தங்கள் நேரம் முழுவதையும் செலவழிக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என கூறிக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்காளம் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. எங்கு பார்த்தாலும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை ஒரு கையில் ஏந்திய நிலையிலும், மறு கையை நீட்டியபடியும் தான் அம்பேத்கரின் சிலை உள்ளது. நாம் சென்றடைய வேண்டிய இலக்கு வெகு தூரத்தில் உள்ளது என்பதையே இந்த விரல் சுட்டிக்காட்டுகிறது என்று தான் அந்த மக்கள் புரிந்து கொள்கின்றார்கள். நமக்கென்று போராட யாருமில்லை. நம்மை மீட்க எந்த கடவுளும் வரமாட்டார் என்பது அந்த மக்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது.

சட்டங்கள் இயற்றுவதால் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது. நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் கூட குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்தால் பள்ளிக்கூடங்களில் கழிப்பிடங்களை கழுவ இந்த குழந்தைகள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். கல்வி ஆலயங்கள் என கொண்டாடப்படும் பள்ளிக்கூடங்களில் இக்குழந்தைகளுக்கு இதுபோன்ற சாதியத்தளைகளிலிருந்து விடுபடும் வழிவகைகளை சொல்லித்தருவதற்கு பதிலாக, மலம் அள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். “சாதியை வைத்து ஒருவன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று ஆவதில்லை” மனிதர்கள் எல்லோரும் சரிநிகர் சமமானவர்களே என்ற மகாத்மா காந்தியின் வாசகங்களை பள்ளி ஆசிரியர் உரக்க வாசித்த போது, குறுக்கிட்ட மாணவி ஒருவர் பொய். இதெல்லாம் பொய். இல்லையென்றால் என்னை மட்டும் ஏன் கழிப்பிடம் சுத்தம் செய்ய அனுப்புகிறீர்கள்? என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அந்த மாணவியை ஆசிரியர் கடுமையாக தாக்கினார். அத்துடன் அந்த மாணவி பள்ளிக்கூடம் செல்லவே இல்லை. ஆன்மீகத்தின் காரணமாக குறிப்பிட்ட சமூகத்தினர் மலம் அள்ளும் தொழிலை செய்வதாக கூறிய நரேந்திர மோடியை “நீங்கள் மலம் சுமந்து பாருங்கள். ஏதாவது ஆன்மீகத்தன்மையை உணருகிறீர்களா என பார்ப்போம் என்று மோடிக்கு சவால் விடுத்தனர் அந்த சாதி மக்கள்.

உயர் சாதியினரும், மேட்டுக்குடியினருமே அரசியலை ஆக்கிரமித்துள்ளதால் மலம் அள்ளும் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை. மலம் அள்ளும் சமுதாயத்தினர் வாழும் இந்த உலகம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட புலனுக்கு தென்படாத பிரதேசம். இந்த இந்தியாவை வெளியில் தெரியாதபடி மறைக்கவே ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். தன் அம்மா கழிப்பிடங்களை சுத்தம் செய்கிறார் என கூறிக்கொள்வதில் எந்த குழந்தைக்கும் பெருமை இருக்காது. எனவே, குழந்தைகளே தாயை ஒதுக்கி வைக்கும் நிலையை இந்த சமூக மக்கள் அனுபவிக்கின்றனர்.

நாம் செய்யும் இந்த வேலை ஒரு தரும காரியம். அதை செய்வதற்காக மட்டுமே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணம் அந்த சமூகத்தினர் பெரும்பாலானோரின் மனதில் ஆழமாக ஊடுருவியுள்ளது. அந்த எண்ணத்தை உருவாக்கியது தான் ஆதிக்க சாதியின் வெற்றி. மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஹெலா என்ற முஸ்லீம் பிரிவை சேர்ந்த பெண்களின் தோள்களில் தான் மலம் அள்ளும் பாரம் ஏற்றி வைக்கப்படுகிறது. முஸ்லீம்களிடையே தீண்டாமை கிடையாது என கூறப்பட்டாலும் ஹெலா சமுதாயத்தை சேர்ந்த பெண்களும், அவர்களின் குழந்தைகளும் தீண்டத்தகாதவர்களாகவே நடத்தப்படுகின்றனர். மதரசாக்கள், மசூதிகள் என எல்லா இடங்களிலும் அவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் நிலவுகின்றன. மயானங்கள் கூட வேறானவை.

இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லீமாக இருந்தாலும் சரி கழிப்பிடங்களை சுத்தம் செய்வது யாரென்று மூன்றாம் நபருக்கு அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அந்த பெண்கள் முக்காடிட்டு முகத்தை மறைத்துக் கொள்கின்றனர். பலர் தங்களை பெயர்களையே கூட மறந்து போய்விட்டனர். கல்யாண ஊர்வலங்கள் நடத்தவோ, மாப்பிள்ளை குதிரையில் ஏறி ஊர்வலமாக வரவோ இவர்களுக்கு உயர் சாதியினர் யாரும் அனுமதியளிப்பதில்லை. மழைக்காலம் என்றால் நமக்கு அழகான காலமாக இருக்கும். ஆனால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கோ மிக பயங்கரமான ஒன்று. பாரம்பரியம், கலாச்சாரங்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் பழைய காலங்களை அனுபவிக்க முடியாதா? கனவிலேயே ஏங்கி கொண்டிருப்போம். ஆனால் இவர்கள் ஒருபோதும் பழங்காலங்களை நினைத்து ஏங்குவதில்லை. தங்கள் வாழ்க்கையில் மாற்றம் வராதா? என்பது மட்டும் தான் இவர்களின் ஒரே ஏக்கமாக உள்ளது.

மனித கழிவகற்றும் மக்கள் தெருவில் நடக்கும் போது தங்கள் முதுகில் நீண்ட துடைப்பத்தை கட்டி தொங்கவிட்டு கொண்டு போக வேண்டும் என்ற நடைமுறை முன்பு இருந்துள்ளது. அவர்கள் காலடிபட்டு களங்கப்பட்ட நிலத்தை அவர்களே பெருக்கி தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக. மேல் சாதிக்காரன் பக்கத்தில் இந்த சனங்கள் போகவே கூடாது. இந்த அவலம் அந்த காலத்தில் மட்டுமல்ல. இன்றும் கூட தான் விலங்கை விட இழிவாக நடத்தப்படுகின்றனர். நாங்கள் மலம் அள்ள வேறு சாதியினர் கோயிலில் மணியடிப்பதா என்ற கேள்வியையும் இவர்கள் கேட்க தயங்கவில்லை. குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்தால் சாக்கடைக்குள் இறங்க வைத்து துப்புரவு தொழிலாளிகளை கொலை செய்யும் நிலை இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையான விஷயம். உழைக்க தெரிந்த இந்த மக்களுக்கு தேவை கடனுதவி அல்ல. சகமனிதர்களால் மதிக்கக்கூடிய மாற்றுத்தொழில் தான். அதோடு சக மனிதன் என்ற மரியாதையையும். சமூகத்தால் உழைப்பை மட்டும் பிடுங்கிக்கொண்டு புறக்கணிக்கப்பட்ட மக்களின் வலியை உணர்வோடு எழுதி அன்றாடம் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை நம் கண் முன் நிறுத்தியுள்ள எழுத்தாளர் பாஷாசிங் அவர்களுக்கு நன்றி.
Read More

Tuesday 15 March 2016

// // 4 comments

ஆங்கிலம் பேசினால் அறிவாளியா?

அட வணக்கம் நண்பர்களே .. இது சும்மா ஒரு சூழலை பார்க்கும் பொது ஏற்பட்ட  ஒரு சிந்தனை .. அத உங்களோட பகிர்ந்து கொள்ள எண்ணினான். இது பற்றிய உங்க கருத்தை கருத்துரையில் சொல்லலாமே.

ஆங்கிலத்தினால் பேசினால் அறிவாளி என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது.  ஆங்கிலத்தில் பேசுகின்றவர்களும் அதை பெருமையாகவேக் கருதி பேசுகின்றனர்.  ஆனால், இவை போன்ற எண்ணங்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை.



மொழித்திறத்திறன் என்பது அறிவைக் காட்டுவதில்லை.   பழக்கத்தினால் வருவது மட்டுமே! எந்தச் சூழலில்  வாழ்கிறோம் என்பதையொட்டியே மொழிப் பேசும் ஆற்றல் வரும்.

ஆங்கிலம் பேசுகின்ற குடும்பத்தில் தங்கி வேலை செய்கின்ற படிப்பே இல்லாத வேலையாட்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள்.  அதனால், அவர்கள் மொழியாற்றல் உள்ளவர்கள் என்று அர்த்தமா?

எனவே, தவறான ஆங்கில மோகம் , மதிப்பு மாற வேண்டும்.  தமிழ் மொழிச் சிதைவிற்கும் , தமிழ்மொழி புறக்கணிக்கப் படுவதற்கும் இத்தவறான எண்ணமே காரணம்.

ஆங்கிலத்தில் பிள்ளைகள் பேசிவிட்டால், அவர்கள் அறிவு அதிகம் பெற்று விட்டதாக ஆர்ப்பாட்டம் செய்வது கூட இத்தவறான எண்ணத்தில்தான்.

மொழிப் பேசும் ஆற்றலை எப்போது வேண்டுமானாலும் பெறலாம்.  அதற்கான சூழலில் சில காலம் வாழ்ந்தால் போதும்.

ஆனால், அறிவுத் திறன் என்பது எவ்வளவு செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம், எவ்வளவு சுயமாகச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்.

ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழி என்பதால் அதனைக் கற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே உண்மை.

அதற்காக தாய் மொழியைப் புறக்கணித்து ஆங்கிலத்தைத் தேர்வு செய்தல் சரியன்று.

சிந்தனை வளமும், சிறந்த அறிவும் தாய்மொழி மூலமே கிட்டும். இது உறுதி செய்யப்பட்ட உண்மை.

Read More

Saturday 12 March 2016

// // Leave a Comment

வந்த வழி

வணக்கம் நண்பர்களே .. இண்டையோட  இந்த  ப்ளாக் தொடக்கி சரியாய் மூண்டு வருஷம்  ஆகிடுதாம். சோ  இது நான் தொடங்கேக்க என்ன  நினச்சுகிட்டு தொடங்கினான். அது இப்ப எந்த அளவுக்கு வந்து இருக்கு.. நான்  நினைச்சதுல எவளவு செய்து இருக்கிறன் எண்டு திரும்பி பாப்பம்  வாங்க ..


இது என் முதலாவது ப்ளாக் இல்லங்க.. இதுக்கு முதல் "இல்லை", "நாங்கள்" எண்டு ரெண்டு  ப்ளாக் செய்தனான். ரெண்டுமே  ஒரு மாசத்துக்குள இழுத்தி மூடிடன். பேந்து  இந்த சிவாவின் அலட்டல் அரம்பிக்கேக்க எனக்கே ஒரு சந்தேகம் இது எவளவு  நாளைக்கு நடக்க போக்குது எண்டு. என்ன அதிசயமோ தெரியல மூண்டு வருசமா  இதுல அப்ப அப்ப அலட்ட நேரம் கிடைக்குது.

நாம தான் எப்பவுமே சின்னதா தொடங்க மாட்டமே.. சோ பலத பற்றி எழுதுறதா தான் தொடங்கினான். பட் அதுல பலத இன்னும் தொடக்கூட இல்லை. நான் எழுதினதிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது எண்டா பருங்கோ

ஆண் பெண் நட்பு எண்டு ஒண்டு எழுதினான். அது தான். அத தவிர சில பதிவுக்கு பல பேருட்ட இருந்து பாராட்டு கிடச்சுது.. சிலதுக்கு செமைய திட்டு விழுந்துச்சு.. இப்பிடி இந்த ப்ளாக் ஆல பலவிசயம் நடந்துச்சு

சோ இந்த மூன்றாவது ஆண்டுக்கு ஒரு கொள்கைய எடுக்கலாம் எண்டு இருக்கன். அது என்ன என்னடா அட்லீஸ்ட் ஒரு பதிவி ஆவது போடுற எண்டு. பாப்பம் நாம தான் அடிக்கடி கொள்கைகளை  மாத்திக்கிடு இருக்கிற ஒரு ஜீவன் அச்சே.. இது எவளவு காலத்துக்கு இருக்கு எண்டு பாப்பம்.

டிஸ்கி - இந்த ப்ளாக்கில என்ன தவிர இனொருத்தரும் எழுத்துற. அது யாரெண்டு இன்னும் உங்களுக்கு சொல்லுறதுக்கு இன்னும் காலம் வரேல்ல. சோ அப்பிடி வரேக்க உங்க எல்லாருக்குமே  சொல்லுறன் சரியா ... அடுத்த பதிவுல சந்திப்பம் .. ta taaa ... Byeeee

அட என்ன வீடியோ எண்டு பாக்கிறிங்களா .. இது நான் என் ப்ளாக்குக்கு செய்த trailer சும்மா ஒருக்கா  பாருங்க ... தெறிக்க விட்டிருக்கம்




Read More

Wednesday 3 February 2016

// // 1 comment

என் பார்வையில்..... :(

மன்னிக்குக ..

என்னடா இவன் முதலிலேயே மன்னிப்பு  கேக்குறானே எண்டு பாக்கிறிங்களா, ஒண்டும் இல்ல இனி நான் சொல்ல போற விடயம் உங்களுள பலருக்கு சிலவேளை சங்கடத்தை கொடுக்கலாம், சில வேளை என்னுல கோவத்த உண்டு பண்ணலாம்.. அதுக்கு தான்.. இது முழுக்க முழுக்க என் சொந்த கருத்து. அதனால நீங்க எத்து கொள்ளாட்டி நான் அதுக்கு ஒண்டுமே செய்ய ஏலாது.

சரி விடயத்துக்கு வருவமா.. அது என்ன எண்டால் எனக்கு இப்ப 20 வயசாகிட்டு
இது வரைக்கும் எத்தனையோ பேரை பாத்துட்டன், எவளவோ பேரோட பழகி இருக்கன். இப்ப என்ன பிரச்சன எண்டால் இதுல எனக்கு கொஞ்ச பேரை பற்றி நல்லாவே தெரியும் அவங்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது பற்றியெல்லாம் இல்லங்க. அவன்களுண்ட குணம், பழக்க வழக்கம் இதுகளை பற்றி.. இப்ப ஒரு ஒரு வருசமா நான் அவங்களை சந்திக்கேல இப்ப இந்த facebookஅஹ பாத்தா அவங்க அவன்களுண்ட பழக்கவழக்கம், செயற்பட்டுகள் எல்லாத்தையும் வேற விதமா காட்டுறாங்கள்.... இதுல எனக்கு ஒரு சந்தேகம் அது என்ன எண்டா இவங்க இந்த ஒரு வருசத்துக்குள இப்பிடி மாறிட்டாங்களா என்றது தான். பிறப்புள இருந்து வந்த குணம் இந்த ஒரு வருசத்துக்குள மாறிட்டா ?? என்றது தான்.

சரி எவ்வளவு காலம் தான் இந்த சந்தேகத்தோடையே இருக்கிறது எண்டு ஒருத்தன மட்டும் செலக்ட் பண்ணி பாத்தா அவன் இன்னும் ரியல் லைப்ல அப்பிடியே தான் இருக்கான் .. அவனுண்ட கருத்துக்கள் மாறவே இல்ல. ஆனா இந்த facebookல அப்பிடியே தலைகீழ் அஹ இருக்கு ...

உதரணத்துக்கு நேருல ஒரு விசயத்த தப்பு எண்டுறான் அனால்  facebookல சரி என்கிறான் :(

எதுக்கு இப்பிடி ?? தெரிஞ்சவங்க யாரும் பதில் தாங்க .....

தொப்பி அளவான மட்டும் போடுங்கோ :(  
Read More